டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப்
இந்த ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியை சிஎஸ்கே அணியுடன் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடவுள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த்திற்கு இது ஒரு சவாலான விஷயம்தான்.
நிரூபிக்க வேண்டிய கட்டாயம்
கடந்த சில மாதங்களில் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பராக நிரூபித்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ள ரிஷப் பந்த், தற்போது கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போதைய சூழலில் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக உள்ள நிலையில், இதையும் சிறப்பாக செய்து முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ரிஷப் சிறந்தவர்
இந்நிலையில் தான் பார்த்த இளம் வீரர்களிலேயே ரிஷப் பந்த் தான் மிகச் சிறந்த வீரர் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் சாம் பில்லிங்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பங்கேற்று விளையாடிய பில்லிங்ஸ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
பில்லிங்ஸ் கேள்வி
இந்நிலையில் முதல் முறை பந்த்தை பார்த்தபோது அப்போதைய அணியின் வழிகாட்டி ராகுல் டிராவிட்டிடம் யார் இந்த பையன் என்று கேட்டதாகவும் ஆனால் தற்போது பந்த்தை அனைவருக்கும் தெரிந்துள்ளதாகவும் பில்லிங்ஸ் மேலும் கூறியுள்ளார். அவர் இந்தியா மற்றும் டெல்லி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தொடர்ந்து வலிமையடைந்து வருவதாகவும் பில்லிங்ஸ் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.