தேடுதல் வேட்டைதேடுதல் வேட்டை
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை 90களின் பின் பகுதியில் இருந்தே தொடங்கியது. யாரும் சரியாக அமையாத நிலையில் ராகுல் டிராவிட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்து வந்தார்.
டெஸ்ட் அறிமுகம்
டெஸ்ட் போட்டிகளுக்கு வேறு விக்கெட் கீப்பரை தேட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அப்போது 17 வயதே ஆன பார்த்திவ் பட்டேல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அவரால் சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
தினேஷ் கார்த்திக்
அவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றார். அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. இவர்கள் இருவருக்கும் பின் தான் தோனிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. தோனியும் முதல் சில போட்டிகளில் ரன் குவிக்கவில்லை.
தோனியின் சதம்
எனினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அட்டகாசமான சதம் அடித்து தன் பார்மை நிரூபித்தார். அதன் பின் பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் வாய்ப்பு இல்லாத நிலை உருவானது. இருவரும் சில தொடர்களில் பங்கேற்றாலும் மாற்று விக்கெட் கீப்பராகவே இருந்தனர்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
பார்த்திவ் பட்டேல் 2008, 2016 மற்றும் 2018இல் மீண்டும் இந்திய அணியில் சில போட்டிகளில் ஆடினார். ஆனால், அப்போதும் அவர் தன் பேட்டிங் பார்மை நிரூபிக்கவில்லை. அதனால், அவருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தோனியின் காலம்
இந்த நிலையில், தோனியால் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதாக கூறப்படும் விஷயம் பற்றி அவர் பேசினார். "பலரும் நான் தவறான காலத்தில் பிறந்து விட்டேன். இது தோனியின் காலம் என்கிறார்கள். ஆனால், நான் முன்பேயும் இதை கூறி உள்ளேன். நான் தோனிக்கு முன்பே இந்திய அணியில் அறிமுகம் ஆனேன்" என்றார்.
செயல்பாடுகள் சரியாக இல்லை
மேலும், "என் கேரியர் தோனியால் பாதிக்கப்பட்டது என் நான் பரிதாபம் தேடினால் அது தவறு. என் செயல்பாடுகள் சரியாக இல்லை. அதனால் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். அதன் பின் தோனி வாய்ப்பு பெற்றார்" என்றார் பார்த்திவ் பட்டேல்.
யாருமே ஆடி இருக்க முடியாது
"நான் சரியாக ஆடி இருந்தால் எனக்கு மாற்றாக யாருமே ஆடி இருக்க முடியாது. நான் தோனியின் காலத்தில் பிறந்ததால் நீண்ட காலம் ஆட முடியவில்லை என எப்போதும் பரிதாபம் தேட மாட்டேன்." என திட்டவட்டமாக கூறினார் பார்த்திவ் பட்டேல்.
விமர்சனம்
முன்னதாக பார்த்திவ் பட்டேல் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் விஷயத்தில் பொறுமை இல்லாமல் இருக்கிறார்கள் எனவும் விமர்சனம் வைத்து இருந்தார். டெஸ்ட் அணியில் சாஹா இருக்கும் நிலையில் தொடர்ந்து பலருக்கும் வாய்ப்பு அளித்ததை அவர் விமர்சித்து இருந்தார்.