பார்த்திவ் படேல் கருத்து
இந்திய அணியை வழிநடத்திய மற்றும் வழிநடத்திவரும் கேப்டன்கள் குறித்த தனது கருத்துக்களை விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான பார்த்திவ் படேல் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனில் பேசிய பார்த்திவ், வீரர்கள் தாங்களே முயற்சி எடுத்து விளையாடுவதை விராட் கோலி ஊக்குவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னால் இருந்து வழிநடத்துவார்
கோலியின் கேப்டன்ஷிப் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறியுள்ள பார்த்திவ் படேல், எப்போதுமே வீரர்களின் முன்னால் இருந்து வழிநடத்துவதை அவர் விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். அணியின் வீரர்களை ஆக்கரமிக்கும் கேப்டனாக விராட் கோலி விளங்குவதாகவும் அதுவே அவரது பிரத்யேக ஸ்டைல் என்றும் கூறியுள்ளார். இந்த ஸ்டைல் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிகொணர்வதில் தோனி சிறப்பு
இதேபோல முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா வீரர்களை அமைதியாக வைத்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பாக தோனி, வீரர்களின் முழுத் திறமையை வெளிக் கொண்டு வருவதில் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறியுள்ளார். வீரர்கள் தங்களது தனி ஸ்டைலில் விளையாட அவர் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
2014ல் இருந்து மேம்பட்டுள்ளார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா சிறப்பாக திட்டமிடுவார் என்று பார்த்திவ் தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த தகவலின்படி எந்த வீரரை, எந்த ரோலில் விளையாட வைக்கலாம் என்று அவருக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். கடந்த 2014ல் இருந்து அவர் தன்னை சிறப்பாக மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். வீரர்களை சிறப்பாக செயல்பட வைக்கும் திறமை தோனி மற்றும் ரோகித்திற்கு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.