முடங்கிய விளையாட்டு போட்டிகள்
சர்வதேச அளவில் கொஞ்சம்கூட கருணை இல்லாமல் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகளை கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இதிலிருந்து இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளபடி வீட்டிலேயே இருக்கின்றனர் விளையாட்டு வீரர்கள்.
களைகட்டாத மைதானங்கள்
இந்நேரத்திற்கு ஐபிஎல் தொடர் துவங்கியிருந்தால், நாடே களைகட்டியிருந்திருக்கும். உள்ளூரின் வீரர்கள் முதல், சர்வதேச வீரர்கள் வரையிலும் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்று அதகளம் செய்திருப்பார்கள். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும், இதற்காக தவமிருந்திருப்பார்கள். மற்ற விஷயங்களை குறித்து அவர்கள் யோசிக்க முடியாமல் செய்திருக்கும் ஐபிஎல் போட்டிகள்.
பாட் கமின்ஸ் கருத்து
இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனில் அதிக விலைக்கு அதாவது 15.5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடஸ் அணியால் வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ், தற்போதைய நிலையில், தன்னுடைய சொந்த மண்ணில் நடத்தப்பட உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கே தான் முன்னுரிமை அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆசையாக காத்திருக்கிறோம்
கடந்த 2, 3 ஆண்டுகளாக டி20 உலக கோப்பை குறித்து தங்களது அணி வீரர்கள் பேசி வருவதாக பாட் கமின்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதேபோல கடந்த 2015ல் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடர் குறித்தும் உற்சாகமாக பேசிய பாட் கமின்ஸ், அந்த தொடரின் இறுதிப்போட்டியில் தான் பங்கேற்க முடியாத நிலையில், தற்போது இந்த தொடர்களில் பங்கேற்க ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் விளையாடவும் ஆசை
உலக கோப்பை போட்டிகள் இந்த ஆண்டோட பெரிய தொடர்கள். அந்த தொடர்கள்ல பங்கேற்கறதுக்கு நான் ரொம்பவே ஆவலோட இருக்கிறேன் என்று பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். இதேபோல ஐபிஎல் தொடரையும் மிஸ் பண்ணாம விளையாடறதுக்கும் தனக்கு ஆசை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.