ராஜ்கோட்: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தை 10,000 ஆதரவாளர்கள் ஆக்கிரமித்து இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை அமைதிவழியில் நடத்துவோம் என்று படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் இன்றுடன் முடிவடைகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. 2-வது 20 ஓவர் போட்டி நடைபெற்ற ஒடிஷாவின் கட்டாக் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 11-ந்தேதி தொடங்குகிறது. இதில் 3-வது ஒருநாள் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள செளராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் அக்டோபர் 18-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த 3-வது ஒருநாள் போட்டியின் போது இடஒதுக்கீடு கோரிக்கைக்காக போராடும் படேல் சமூகத்தினர் 10,000 பேர் மைதானத்தில் அமர்ந்து அமைதிவழியில் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்திக் படேல் கூறுகையில், எங்கள் உறுப்பினர்களுக்கென தயாரிக்கப்பட்ட ஜெய் சர்தார் என்ற வாசகம் கொண்ட டி-சர்ட்களை அணிந்து ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம். ஆட்டத்துக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கமாட்டோம் என்றார்.
ஹர்திக் படேலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 3-வது ஒருநாள் போட்டியை பார்வையிட வரவிருந்த குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது வருகையை ரத்து செய்துள்ளார். அதேபோல் ஒரிஜனல் அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று குஜராத் மாநில போலீஸ் அறிவித்துள்ளது.