குழந்தை குறித்த அறிவிப்பு
தன்னுடைய முதல் குழந்தை பிறப்பு குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார் விராட் கோலி. இதையடுத்து வரும் ஜனவரியில் இருவராக உள்ள தாங்கள் மூவராக உள்ளதாக மகிழ்ச்சியுடன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் தங்களது வலைதளங்களில் பதிவிட்டனர்.
நாடு திரும்பும் கோலி
இதையடுத்து ஐபிஎல் 2020 சீசனில் பஙகேற்ற கோலி, தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்காக தன்னுடைய அணியுடன் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளார். இதனிடையே தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி அவர் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பவுள்ளார்.
அதிகமான விமர்சனங்கள்
அவருக்கு இதற்கான அனுமதியை வழங்கிய பிசிசிஐ, அதை உறுதிப்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் புள்ளிகள் சேர்க்கப்பட உள்ள நிலையில் பொறுப்பில்லாமல் குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பும் விராட்டின் முடிவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கோலியின் முடிவு
கடந்த 2015ல் உலக கோப்பை தொடரின்போது பயிற்சி ஆட்டங்களின் போது எம்எஸ் தோனியின் மகள் ஜிவா பிறந்தார். அப்போது அவர் நாடு திரும்ப முயற்சிக்காமல் நாட்டிற்காக விளையாடும் தொடர்தான் முக்கியம் என்று தெரிவித்திருந்தார். இதை எடுத்துக்காட்டி கோலியின் தற்போதைய முடிவு குறித்து மோசமான கமெண்ட்டுகள் வழங்கப்பட்டன.
கவாஸ்கரை எடுத்துக்காட்டி விமர்சனம்
முன்னாள் கேப்டன் கபில்தேவும் கடந்த 1975-76ல் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது சுனில் கவாஸ்கர் தன்னுடைய மகனின் பிறப்பையொட்டி நாடு திரும்ப முயற்சிக்கவில்லை என்று சுட்டிக் காட்டினார்.
ரிக்கி பாண்டிங் கேள்வி
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் விராட் கோலி இல்லாத டெஸ்ட் தொடரில் அணியின் வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்றும், கோலியின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்று அவர்களுக்கு தெளிவான திட்டம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
சரியான முடிவு -சாஸ்திரி
கோலியின் இந்த விடுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் மற்றும் நெருக்கடிகள் வைக்கப்படும் நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வார்னர், விராட்டின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதேபோல இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரியும் இத்தகைய தருணங்கள் மீண்டும் கிடைக்காது என்று விராட்டின் முடிவை வரவேற்றுள்ளார்.
இந்தியாவில் குவாரன்டைன்
வரும் 17ம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கேப்டன் கோலி நாடு திரும்பவுள்ள நிலையில், இந்தியாவிலும் குவாரன்டைனை மேற்கொண்டு பின்பே தன்னுடைய மனைவி அனுஷ்காவை சென்றடைவார். வரும் ஜனவரியில் அவர்கள் தங்களது குழந்தையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.