ஏமாற்றிய கெயில்
இன்று நடைபெற்ற போட்டியில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத் அணியுடன் பஞ்சாப் மோதியது. இந்த தொடரில், ஹைதராபாத் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் தான் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் அடிநாதமே லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வாலின் அதிரடி பேட்டிங் தான். ஆனால், இன்று இருவரும் மிக விரைவில் அவுட்டானார்கள். மாயங்க் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 21 ரன்னிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில், 14 ரன்களில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார். பிறகு நிகோலஸ் பூரன் சிக்ஸ் அடுத்து சிறப்பாக இன்னிங்ஸை தொடங்கினாலும் 8 ரன்களில் கேட்ச் ஆனார். தட்டி தட்டி விளையாடிய எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மோசமான சொதப்பல்
இதன் பிறகு கடைசி நம்பிக்கையாக இருந்த தீபக் ஹூடா, 13 ரன்களில் அவுட்டாக அதன் பிறகு ராஜஸ்தான் அணியால் மீண்டு வரவே முடியவில்லை. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோட்டல் பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் ஃபெயிலியர் ஆனது. கேப்டனாக லோகேஷ் ராகுல் எவ்வளவோ முயன்றாலும், அந்த அணி ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கிவிடுகிறது. நன்றாக விளையாடும் போட்டியில், கடைசி நேரத்தில் தோற்பது என்பது பஞ்சாப் அணியின் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 5 ரன்கள் கூட அடிக்க முடியாமல் பஞ்சாப் தோற்றது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. 19 ஓவர்கள் வரை ஆட்டத்தில் முழுமையாக டாமினேட் செய்த பஞ்சாப், கடைசி ஓவரில் மிக மோசமாக சொதப்பி தோற்றது.
அடுத்தடுத்து விக்கெட்ஸ்
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில், முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினார். ஷமி ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேறினார். கடந்த போட்டியிலும் முதல் ஓவரிலேயே வெளியான வார்னர், இந்த போட்டியிலும் முதல் ஓவரில் அவுட்டாகி அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் போல்டாகி அதிர்ச்சி கொடுக்க, மனீஷ் பாண்டே 13 ரன்களில் ரவி பிஷ்னாய் ஓவரில் போல்டானார். பிறகு கேதர் ஜாதவ்வும் 12 ரன்களில் பிஷ்னாய் போல்டாக, ஹைதராபாத்தின் நிலைமை படுமோசமானது.
6 பந்துகளில் 17 ரன்கள்
அடுத்த சில நிமிடங்களில் அப்துல் சமத் வெறும் 1 ரன்னில் பிஷ்னாய் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 எனும் இக்கட்டான நிலைக்குச் சென்றது சன் ரைசர்ஸ். இதன் ஜேஸன் ஹோல்டர் அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசி, போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். மெல்ல மெல்ல அவர் சாகாவுடன் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்துகொண்டிருந்த போது, தேவையே இல்லாமல் ரிதிமான் சாஹா 31 ரன்களில் ரன் அவுட் ஆக ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிறகு, ரஷீத் கான் 3 ரன்களில் அவுட்டாக, சன் ரைசர்ஸ் 7வது விக்கெட்டை இழந்தது. பிறகு 19வது ஓவரில், அர்ஷதீப் அட்டகாசமாக வீசி வெறும் நான்கு ரன்களே கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
8வது தோல்வி
இதில், கடைசி ஓவரை நாதன் எல்லிஸ் வீச, அந்த ஓவரில் 11 ரன்களே சன் ரைஸர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால், பஞ்சாப் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கடைசி ஓவரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த பஞ்சாப், இந்த போட்டியில் ஒருவழியாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஜேஸன் ஹோல்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். முடிவில் சன் ரைசர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்கள் மட்டும் எடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், 9வது போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் 8வது தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், அந்த அணி ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இனி வரும் 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால் கூட, ஏதாவது அதிசயம் நிகழ்ந்ததால் தான், பிளே ஆஃப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். பட்.. அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. அதேசமயம், 10வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் 4வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் அந்த அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.