படிக்கல் அதிரடி
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். வழக்கம் போல் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடி + நிதானம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. குறிப்பாக, படிக்கல் தொடக்கம் முதலே பஞ்சாப் பவுலர்களை விளாச ஆரம்பித்துவிட்டார். கோலி அடக்கி வாசிக்க, நல்ல ரிதம் கண்ட படிக்கல், மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசினார்.
ஸ்பைக் இருந்தது
இந்நிலையில், ரவி பிஷ்னாய் வீசிய 7.3வது ஓவரில், ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்றார் படிக்கல். பந்து பேட்டில் படாததால், கீப்பர் ராகுல் வசம் சென்றது. அப்போது, அவர் கேட்ச் பிடித்த போது, பேட்டில் பட்டது போல் ஒரு சப்தம் கேட்டது. ஆனால், அம்பயர் அனந்த பத்மநாபன் அவுட் கொடுக்கவில்லை. இதனால், சற்றும் யோசிக்காத ராகுல் ரிவ்யூ சென்றார். ரிவ்யூவில் பந்து கிளவுஸில் பட்டது போன்று தான் அல்டரா எட்ஜில் காட்டியது. அதாவது அங்கு லைட்டாக ஸ்பைக் இருந்தது.
ராகுல் கோபம்
ஆனால், மூன்றாவது அம்பயர் அதனை அவுட் இல்லை அறிவிக்க, ராகுல் டென்ஷனாகிவிட்டார். அப்போதே அவர் கள நடுவர் அனந்த பத்நாபனிடம் சென்று, "ULTRAEDGE-ல் ஸ்பைக் இருந்ததே.. கோடுகள் தெரிந்ததே.. அப்புறம் ஏன் அவுட் கொடுக்கல?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொறுமையாக பதிலளித்த அம்பயர், தன் தோள்களை குலுக்கி, இதில் தான் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பது போல் கூறினார். இதனால், ஆட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
படிக்கல் அவுட்
எனினும், "வாழ்க்கை என்பது ஒரு வட்டம்" என்பது போல, மீண்டும் படிக்கல் எட்ஜ் ஆக, ராகுல் அதனை பிடித்தார். இம்முறை அவருக்கு பந்து வீசியவர் மாய்சஸ் ஹென்ரிக்ஸ். ஆனால், இம்முறை பந்து பேட்டில் சப்தம் சற்று கடுமையாக இருக்க, எந்தவித யோசனையும் இன்றி, உடனே அம்பயர் அனந்த பத்மநாபன், மூன்றாவது நடுவரிடம் செல்ல, தானே அவுட் கொடுத்துவிட, ரிவ்யூ ஏதும் எடுக்காமல் 40 ரன்களில் வெளியேறினார் தேவ்தத் படிக்கல்.