நியூசிலாந்து அணி சொதப்பல்
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கவிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு ரத்தானது. வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாக காரணம் கூறி அந்நாட்டில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறியது. நியூசிலாந்து அணி 2002ம் ஆண்டுக்கு பிறகு (18 வருடங்களுக்கு பிறகு) தற்போது தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இங்கிலாந்தின் அறிவிப்பு
நியூசிலாந்து அணி வெளியேறிய அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தானுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியாக இங்கிலாந்து அணியும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இங்கிலாந்து அணி வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்கவிருந்தது. கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆனால் அந்த தொடரையும் ரத்து செய்துள்ளது.
இங்கிலாந்தின் முடிவு
இங்கிலாந்தின் பாதுகாப்பு குழுவினர் பாகிஸ்தானின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தனர். அதில் எங்கள் அணி வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்திக்கு உள்ளானது. எவ்வளவோ விளக்கம் அளித்தும் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டனர் என குற்றம்சாட்டியது.
எதிரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், ரமிஷ் ராஜா வீரர்களுக்கு புதிய கட்டளை ஒன்றை விதித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நமது அண்டை நாடான இந்தியாவை மட்டுமே பரம எதிரியாக வைத்து தாக்கவிருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இணைந்துள்ளன.
பழித்தீர்க்க திட்டம்
வீரர்களே... உங்களின் பலத்தை மேலும் கூட்டுங்கள். வெற்றி பெறுவேண்டும் என்ற எண்ணத்தை நன்கு மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நாம் எந்தவித தவறையும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டனர். எனவே அவர்களுக்கு எதிராக எக்காரணத்தை கொண்டும் தோல்வியை பெற்றுவிடக்கூடாது. இந்தியா உடன் சேர்த்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தையும் நாம் பழிவாங்கிட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் வீரர்கள் தற்போது எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஆஃப்கானிஸ்தான் அணியுடன் டி20 போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.