சர்ச்சைக்குரிய கருத்து
முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்வதேச கிரிக்கெட் குறித்து அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஏறக்குறைய அவரது அனைத்து கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக சமீபத்தில் 3 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
சோயிப் அக்தர் சர்ச்சை கருத்து
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசிய அக்தர், பிசிபி சட்ட ஆலோசகர் தபாசுல் ரிஸ்வியையும் வம்பிழுத்துள்ளார். அவருக்கு சட்ட அனுபவம் இல்லையென்றும், சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே அவரது வேலை என்றும் தெரிவித்திருந்தார்.
அக்தர் மீது ரிஸ்வி வழக்கு
இதனிடையே, தன்னை குறித்த அக்தரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரிஸ்வி, சோயிப் அக்தர்மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளார். மேலும் அவர்மீது வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் 100 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிசிபி எச்சரிக்கை
மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டு பிசிபி மற்றும் சட்ட ஆலோசகர் குறித்த விமர்சனங்களை சோயிப் அக்தர் பதிவ செய்துள்ளார். இதை அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சட்டக்குழு குறித்து விமர்சனம் செய்யும்போது மிகவும் கவனமான வார்த்தைகளை சோயிப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.