சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி
2016 டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்பராஸ் அஹ்மது, பின்னர் ஒருநாள் அணிக்கும் கேப்டன் ஆனார். 2017இல் இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பை வென்றது. அப்போது முதல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய ஹீரோ ஆனார் சர்பராஸ் அஹ்மது.
தொடர் தோல்விகள்
2019 உலகக்கோப்பை நெருங்கிய வேலையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. 2019ஆம் ஆண்டில் உலகக்கோப்பைக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் தொடரில் படுதோல்வி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வைட்வாஷ் தோல்வி என பரிதாபமாக காட்சி அளித்தது பாகிஸ்தான்.
சர்பராஸ் அஹ்மது மீது புகார்
அப்போதே சர்பராஸ் அஹ்மதை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. எனினும், அவர் தன் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பேட்டிகளில் கூறி வந்தார்.
உலகக்கோப்பை சொதப்பல்
உலகக்கோப்பை தொடரில் பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இந்திய அணியிடம் தோற்ற பின் பெரும் எதிர்ப்பை சந்தித்தது பாகிஸ்தான்.
உலகப் புகழ் கொட்டாவி
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை காட்டிலும், சர்பராஸ் அஹ்மது கொட்டாவி விட்டது உலகப் புகழ் பெற்றது. மேலும், போட்டிக்கு முந்தைய நாள் சர்பராஸ் பர்கர் வாங்கிச் சென்ற காட்சிகளையும் வைத்து அவரை கொட்டாவி கேப்டன், பர்கர் கேப்டன் என திட்டித் தீர்த்தனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.
இலங்கை தொடர்
உலகக்கோப்பைக்குப் பின் சர்பராஸ் அஹ்மது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக தொடர வைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
தொடரில் தோல்வி
டி20 தொடரில் அனுபவ வீரர்கள் இல்லாத இலங்கை அணியை தான் சந்தித்தது பாகிஸ்தான். அப்படி இருந்தும், அனுபவம் இல்லாத புதிய கேப்டனை கொண்ட இலங்கை அணியிடம் 3 - 0 என தோற்றது பாகிஸ்தான்.
கேப்டன் பதவி பறிப்பு
இதை அடுத்து மீண்டும் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், சர்பராஸ் அஹ்மது டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வித அணிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
அணியில் இருந்தே நீக்கம்
மேலும், சர்பராஸ் அஹ்மது கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோசமான பேட்டிங் பார்மில் இருக்கிறார். அதனால், கேப்டன் பதவியோடு சேர்த்து அவரை மொத்தமாக அணியில் இருந்தே நீக்கி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
புதிய கேப்டன்கள்
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருப்பதால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியம் என்ற நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வரும் பாபர் ஆசாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் இந்த ஆண்டில் ஆடப் போவதில்லை என்பதால் அந்த அணிக்கு மட்டும் கேப்டன் நியமிக்கப்படவில்லை.