டி20 தொடர்
பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.
மீண்டும் பி.எஸ்.எல்
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து அணி வீரர்களும் மே 25ம் தேதி அபுதாபி புறப்படவிருந்தனர்.. இதற்காக அனைத்து வீரர்களும், அதிகாரிகளும் லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஹோட்டல்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.
சிக்கல்
ஆனால் வீரர்களுக்கு விசா பிரச்னைமற்றும் விமானம் தரையிரங்குவதற்கு அனுமதி கிடைக்காதது போன்றவைகளால் பிஎஸ்எல் மீண்டும் தள்ளிப்போயுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பிஎஸ்எல் அணி அதிகாரிகளுக்கு இடையே இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7ம் தேதியில் தொடரை தொடங்கவும், இறுதிப்போட்டி ஜூன் 20ல் இருந்து ஜூன் 24ம் தேதி தள்ளிவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கம்
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், 16 தொலைக்காட்சி ஒளிப்பரபரப்பு குழுக்கள், துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமீரக அரசு அனுமதி வழங்கிவிட்டால் ஜூன் 7ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடங்கலாம். அதே போல சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட 6 வீரர்களும் அபுதாபிக்கு சென்று ஒரு வார காலம் குவாரண்டைன் இருந்து வருகின்றனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
பிஎஸ்எல் தொடர் தள்ளிப்போவதால், பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச போட்டியில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக பாகிஸ்தான் அணி வரும் ஜூன் 23ம் தேதி புறப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது அது ஜூன் 25ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.