கேள்விக்குறியான உலக கோப்பை
இந்தியாவில் வரும் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்கள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
பிசிபி கோரிக்கை
இதனிடையே, இந்தியாவில் வரும் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் வகையில், விசா உள்ளிட்டவற்றில் பிரச்சினைகள் வராமல் இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிபி வலியுறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய கோரியுள்ளது.
இந்தியாவிலா? ஆஸ்திரேலியாவிலா?
இந்த உத்தரவாதத்தை இன்னும் சில மாதங்களில் ஐசிசி பெற்றுத்தர வேண்டும் என்று யூடியூபில் கிரிக்கெட் பாஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பிசிபி சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர், இந்தியாவிலா அல்லது ஆஸ்திரேலியாவில் நடைபெறுமா என்பது குறித்தும் ஐசிசி விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பங்கேற்கும்
2021ல் இந்தியாவில் டி20 உலக கோப்பை நடத்தப்படும் நிலையில், 2022ல் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டிற்கான தொடர் நடத்தப்படலாம் என்றும் வாசிம் கான் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா -பாகிஸ்தான் இடையில் போட்டித் தொடர்கள் நடத்தப்படுவது தற்போது சாத்தியப்படாத நிலையில், டி20 உலக கோப்பை ஐசிசியின் நிகழ்வு என்பதால், அதில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க கோரிக்கை
இதனிடையே, சமீப காலங்களில் பாகிஸ்தானுக்கு எந்த விளையாட்டு போட்டிக்கும் இந்தியா அனுமதி தராத சூழல் நிலவுவதால், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் வகையில், பிசிசிஐ, இந்திய அரசிடம் அனுமதி பெற்று அதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.