டெஸ்ட், ஒருநாள் போட்டிகள்
வரும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளனர். இதையொட்டி முன்னதாக லாகூரில் பயிற்சி ஆட்டங்களுக்கு பிசிபி திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் இந்த பயிற்சி ஆட்டங்களை கடந்த செவ்வாயன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் பயணம்
மேலும் ஒரு மாதம் முன்னதாகவே அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் அங்கேயே பயிற்சி மேற்கொள்ளவும் பிசிபி திட்டமிட்டு இதையொட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறது. இங்கிலாந்தில் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
பாபர் அசாமிற்கு எச்சரிக்கை
இதனிடையே, பிசிபி தலைமையகத்திற்கு அருகில் உள்ள கடாபி மைதானத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் சக வீரர்கள் இமாம் உல் ஹக், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா உள்ளிட்ட சில வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதாகவும் அதில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிசிபி எச்சரிக்கை
அப்துல் காதிர் கிரிக்கெட் அகாடமியில் இந்த பயிற்சிகளை மேற்கொண்ட பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில்தான் பாதுகாப்பு வழிமுறைகள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் இனி கவனத்துடன் இருக்க பிசிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.