பாகிஸ்தானில் கிரிக்கெட்
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் ஆட எந்த நாட்டின் கிரிக்கெட் அணியும் எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. சமீபத்தில் இலங்கை அணி நீண்ட விவாதங்கள், மேற்பார்வைக்குப் பின் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் ஆடியது.
இங்கிலாந்து இளவரசர்
ஐந்து நாள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியம்ஸ், அவரது மனைவி கேட் மிடில்டன் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.
2006க்குப் பின்..
2006ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் வரும் முதல் இங்கிலாந்து ராஜ குடும்பத்தின் இளவரசரும், இளவரசியும் இவர்கள் தான், முன்னதாக இளவரசர் சார்லஸ், கமீலா 2006இல் வந்திருந்தனர்.
கிரிக்கெட் ஆடிய இளவரசர்
கடந்த வியாழன் அன்று லாகூரில் இருக்கும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருகை தந்த வில்லியம்ஸ், கேட் மிடில்டன் இருவரும் அங்கே பயிற்சி பெற்று வரும் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்தனர்.
வரவேற்பு
முன்னதாக அவர்களை முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது அணியில் ஆடி வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் ஆன வக்கார் யூனிஸ், ஹசன் அலி, அசார் அலி, ஷஹீன் அப்ரிடி, சனா மிர், ஆயீஷா ஸாபார், உரூஜ் மும்தாஸ் வரவேற்றனர்.
மகிழ்ச்சி
இளவரசரும், இளவரசியும் அவர்களாகவே கிரிக்கெட் ஆடச் சென்றார்களா? என்பது தெரியவில்லை. எப்படியோ, இளவரசர், இளவரசி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் ஆடி விட்டனர். அது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஒரு வகையில் ஆனந்தத்தை அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
2009ஆம் ஆண்டு தாக்குதல்
2009ஆம் ஆண்டு இலங்கை அணி மீது பாகிஸ்தான் நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின் அந்த நாட்டில் கிரிக்கெட் ஆட மறுத்து வரும் பல்வேறு அணிகளையும் இது சிந்திக்க வைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இப்போது குஷியாகி இருக்கும்.