தள்ளி வைக்க ஐசிசி முடிவு
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த நாட்டில் வெளிநாட்டினர் நுழைய வரும் செப்டம்பர் மாதம்வரை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரை அடுத்த ஆண்டிற்கு அல்லது 2022க்கு ஒத்திவைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெறவுள்ள பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசியிடம் பிசிசிஐ ஆலோசனை
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை, அந்த காலகட்டத்தில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ, இதுகுறித்து முன்னதாக ஐசிசியிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
ஒத்திவைக்க ஆதரவு கிடையாது
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைத்துவிட்டு, அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பையை நடத்த கால அவகாசம் உள்ளதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் பட்சத்தில் அந்த தொடரை நடத்தலாம் என்றும் பிசிபி கூறியுள்ளது.
உள்ளூர் தொடருக்கு முக்கியத்துவம்
ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களை ஒத்திவைப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பிசிபி, ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐசிசியின் முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைப்பதற்கு பிசிபி ஆதரவு அளிக்காது என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் 2022க்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணங்கள் திட்டமிடல்
மேலும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிசிபி, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டால், அதற்கேற்றாற்போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது திட்டங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களை திட்டமிடும் என்றும் தெரிவித்துள்ளது.