யார் அந்த சிறுவர்கள்?
அந்த இரண்டு சிறுவர்கள் - இந்திய அணியின் துவக்க வீரராக நிரந்தர இடம் பிடிக்க முயன்று வரும் ப்ரித்வி ஷா மற்றும் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர்கள் இருவரும் தான் தங்கள் பால்ய காலத்தில் அருகருகே அமர்ந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை கண்டனர்.
மும்பையில் நடந்த பைனல்
2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அது சச்சினின் சொந்த ஊர். அவர் அந்த மைதானத்தில் தான் பயிற்சி செய்துள்ளார். அங்கே பல உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
இளம் வீரர் ப்ரித்வி ஷா
அதே மும்பையை சேர்ந்த இளம் வீரர் தான் ப்ரித்வி ஷா. எட்டு வயதில் இருந்தே சச்சினின் பார்வையில் இருந்து வருகிறார். அப்போதே அவரது பேட்டிங் பாணியை பாராட்டி, இந்திய அணியில் இடம் பெறுவார் என கணித்து இருந்தார் சச்சின்.
அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது அண்டர் 16 அணி, மும்பையில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறார். வேகப் பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் ஆடி வருகிறார். ப்ரித்வி ஷாவுடன் இந்திய அணியின் உடையில் அமர்ந்திருக்கும் சிறுவன் இவர் தான்.
உத்வேகம் அளித்த இறுதி
2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா வரலாறு படைத்த போது அதை நேரில் கண்ட இந்த சிறுவர்கள், அந்த உத்வேகத்துடன் தான் இன்று கிரிக்கெட் உலகில் ஈர்த்து வருகிறார்கள். குறிப்பாக, ப்ரித்வி ஷா இளம் வயதில் இந்திய அணியில் இடம் பெற்று தன் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்ததை குறிப்பிடலாம்.
ரசிகர்கள் கருத்து
ப்ரித்வி ஷா, அர்ஜுன் டெண்டுல்கர் புகைப்படம் ரெடிட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு, கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும், கருத்து கூறப்பட்டும் வருகிறது. சிலர் கிண்டல் அடிக்கவும் செய்துள்ளனர். குறிப்பாக அர்ஜுன் டெண்டுல்கரை!
முதல் மாணவன்
ப்ரித்வி ஷாவுடன் அர்ஜுன் அமர்ந்து இருப்பதை குறிப்பிட்டுள்ள சிலர், வகுப்பில் முதல் மாணவனுடன் அமர வேண்டும் என சச்சின் கூறியதை அர்ஜுன் கடைபிடிக்கிறார் என கிண்டல் செய்துள்ளனர். சிலர் அர்ஜுனின் பார்வை எங்கேயோ இருப்பதை வைத்தும் கிண்டல் செய்துள்ளனர்.
12 ஆண்டுகள் கழித்து..
சிலர், அடுத்த 12 ஆண்டுகளில் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்று கொடுக்கப் போகிறார்கள். அதைத் தான் அவர்கள் அன்று அருகே அமர்ந்து காட்டி இருக்கிறார்கள் என புகழவும் செய்தனர்.