மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலருக்கும் பல அனுபவம் கிடைத்திருக்கும். போட்டோகிராபர் யூரி கோர்டஸ்க்கு இது மறக்க முடியாத புதிய அனுபவமாக அமைந்தது. நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு, குரேஷியா வீரர்களின் வெற்றி கொண்டாட்டங்கள் படங்களை அவர் குளோஸ்அப்பில் சுட்டுத் தள்ளியுள்ளார்.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் மான்ட்ஜூகிக் அடித்த வெற்றி கோல் குரேஷியாவை முதல் முறையாக உலகக் கோப்பை பைனலுக்கு அழைத்து சென்றது.
அந்த கோல் அடித்ததும், மைதானத்தின் ஒரு மூலையில் வீரர்கள் வெற்றிக் கோஷத்துடன் ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்த போட்டோகிராபர் யூரி கோர்டஸ் அந்த தருணங்களை படம் எடுத்தார்.
வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொண்டாடினர். அப்போது, அவர்களுக்கே தெரியாமல் கோர்டஸ் மீது விழுந்து, அவரையும் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.
கோடிக் கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைத்ததை கோர்டஸ் சரியாக பயன்படுத்திக் கொண்டார். வீரர்களின் முகத்தில் இருந்த சந்தோஷம், பெருமிதம் என பல உணர்ச்சிகளை தன்னுடைய கேமராவில் குளோஸ்அப்பில் படம் எடுத்துள்ளார்.
வெற்றி தரும் அந்த மகிழ்ச்சியான தருணங்களை வெற்றிகரமாக படம் எடுத்த பெருமிதம் மெக்சிகோவைச் சேர்ந்த கோர்டஸ்கும் கிடைத்துள்ளது. அவர் எடுத்த அந்த அபூர்வ படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.