நாளை மறுதினம் துவக்கம்
இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு போட்டியாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் துவங்கி வரும் 26ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
விழாக்கோலம் பூண்டுள்ள கொல்கத்தா
வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி முதல்முறை இந்தியாவில் நடைபெறவுள்ளநிலையில், அதை குறிக்கும்வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் போட்டி துவக்கத்தின்போது, துணை ராணுவத்தினர், ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் கொடுக்க உள்ளனர்.
ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மோதல்
உலக அளவில் கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் பகலிரவு போட்டிகள் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், தற்போது 4 ஆண்டுகள் கழித்தே இந்தியா இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிமுகம்
2015க்கு பின்பு சர்வதேச அளவில் 10 பகலிரவு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இதில் ஐந்து முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்த நிலையில், பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தது.
கடந்த 1997ல் இரவு போட்டி
கடந்த 1997ல் குவாலியரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் இரவில் நடத்தப்பட்டன. ஆனால் இந்த போட்டியில் வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
2000ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது
இதனிடையே, கடந்த 2000வது ஆண்டில் பிங்க் பந்துகளை கொண்டு பகலிரவு பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் அந்நாட்டின் டிரினிடாட் மற்றும் டோபாகோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பிங்க் பால் போட்டி
இந்நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்தபோது, சிஏபி சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி பிங்க் பால்களை கொண்டு போட்டி நடைபெற்றது. மோஹுன் பகன் மற்றும் போவானிப்பூர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி, மோஹுன் பகன் அணி வெற்றிபெற காரணமானார்.
முதல்முறையாக பிங்க் எஸ்ஜி பந்துகள்
இந்நிலையில் நாளை மறுநாள் ஈடன் கார்டனில் இந்தியா -வங்கதேசம் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக பிங்க் நிற எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.