உயிரிழப்பு
ஐபிஎல் தொடரில் மும்பை அணிகாக பங்கேற்றிருந்த பியூஸ் சாவ்லா, சமீபத்தில் தான் வீடு திரும்பினார். இதனிடையே அவரின் தந்தை பிரமோத் குமார் சாவ்லா கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்ஸ்டா பதிவு
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சாவ்லா, என் தந்தை பிரமோத் குமார் சாவ்லா, இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் சமீப நாட்களாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரியுள்ளார்.
ஆறுதல்கள்
பியூஸ் சாவ்லாவின் தந்தை உயிரிழந்த செய்தியை அறிந்த சக கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், அங்கீட் பவ்னே, ஈஸ்வர் பாண்டே ஆகியோர் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள் தொலைப்பேசி மூலம் அழைத்து ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
2வது வீரர் இழப்பு
சமீபத்தில் கொரோனா தொற்றால் தந்தையை இழந்த 2வது வீரர் பியூஸ் சாவ்லா ஆகும். இதற்கு முன்னர் நேற்று ராஜஸ்தான் அணி வீரர் சேத்தன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த இழப்பே கிரிக்கெட் உலகை விட்டு நீங்காத நிலையில் தற்போது பியூஸ் சாவ்லா தந்தையின் மரண செய்தி வெளியாகியுள்ளது.