தொடரை வென்ற இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் கடந்த 24ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெற்ற நிலையில், இதுவரை இல்லாத வகையில் 5 போட்டிகளிலும் வெற்றி கொண்டு இந்தியா இமாலய சாதனை புரிந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் இத்தகைய சாதனையை புரிந்துள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
கேப்டன் கே.எல். ராகுல்
நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மோதிய 5வது சர்வதேச டி20 போட்டி நேற்று மவுண்ட் மாங்கானுய்யில் நடைபெற்றது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். 60 ரன்கள் அடித்த நிலையில் அவரும் காயம் காரணமாக பெவிலியனுக்கு திரும்பிய நிலையில் இளம் வீரர் கே.எல். ராகுல் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வெற்றியை உறுதி செய்தார்.
கடினமாக உள்ளது -கே.எல்.ராகுல்
5வது போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பேசிய கே.எல். ராகுல், ஒவ்வொரு மாதமும் அதிகமான போட்டிகளை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடி வருவதை சுட்டிக் காட்டினார். இதனால் உடலளவில் தொடர் போட்டிகளை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளதாக ராகுல் குறிப்பிட்டார். தொடர் போட்டிகள் காரணமாக உடலையும் மனதையும் சரியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.
சவாலான தொடர்கள்
முன்னதாக எதிரணி வலிமையானதாக இருந்தாலும் எப்போதும் பொறுமையுடன் போட்டியை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு அது பெரிய சவாலாக இருந்ததில்லை என்று தெரிவித்த கே.எல். ராகுல், ஆனால் தொடர் போட்டிகள் காரணமாக கடந்த சில தொடர்களை எதிர்கொண்டு விளையாடுவது மிகுந்த சவாலாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விராட் கோலியும் கருத்து
இதே கருத்தை கேப்டன் விராட் கோலியும் முன்னதாக பதிவு செய்திருந்தார். ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்கு விளையாடுவதற்காக செல்லும்போது, அந்த நாட்டின் நேரத்துடன் பொருந்த காலஅவகாசம் தேவைப்படுவதாகவும், ஆனால், நேரடியாக மைதானத்திற்கு சென்று ஆடும்வகையில் போட்டிகள் வடிவமைக்கப்படுவதாகவும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.