டெல்லி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து அவருக்கு பேட் பரிசளித்தனர்.
இங்கிலாந்தில் சமீபத்தில் நிறைவடைந்த மகளிர் உலக கோப்பையில் பைனல் வரை சென்று 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது இந்திய அணி.
இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் இன்று மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவருக்கு வீராங்கனைகள் சார்பில் பேட் பரிசளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வீராங்கனைகளையும் தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடி.
இந்த சந்திப்பின்போது, நெருக்கடியை எப்படி சமாளிப்பது என சந்தேகம் கேட்டனர் வீராங்கனைகள். அதற்கு, யோகா செய்யுமாறு பிரதமர் பதில் கூறினார். யோகா உடலையும், மனதையும் சமன்படுத்தும் என்று மோடி தெரிவித்தார்.
Had a wonderful interaction with the Indian cricket team that took part in the women's cricket world cup. @BCCIWomen pic.twitter.com/750452ZzUx
— Narendra Modi (@narendramodi) July 27, 2017
வீராங்கனைகள் தாங்கள் பைனலில் தோல்வியடைந்துவிட்டதாக நினைக்க வேண்டாம் என்று கூறிய பிரதமர், 125 கோடி இந்தியர்களும், அந்த தோல்வி சுமையை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய மகள்கள், பல சர்வதேச போட்டிகளில் நாட்டுக்கு பெருமை தேடிதந்து கொண்டுள்ளதாக புகழாரம் சூட்டிய மோடி, மகளிர் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உறுதியளித்தார்.