கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இன்னும் உயரும் அபாயம் உள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனா வைரஸ் போருக்கு இணையான பாதிப்பை வெளிப்படுத்தி வருவதாக கூறி இருந்த அவர் அடுத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
|
மக்கள் ஊரடங்கு
அதில் மக்கள் மார்ச் 22 அன்று காலை முதல் மாலை வரை வீட்டிலேயே இருக்குமாறும், மக்கள் தங்களை தாங்களே ஊரடங்கு செய்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கும் என்றார்.
|
யுவராஜ் சிங், கைப்
இந்த கோரிக்கையை மக்கள் ஏற்று செயல்படுமாறு பல்வேறு பிரபலங்களும் மக்களுக்கு கூறி வருகின்றனர். ட்விட்டரில் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் இதை வலியுறுத்தி இருந்தனர். மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறி இருந்தனர்.
|
மோடி அழைப்பு
அதை சுட்டிக் காட்டி உள்ள பிரதமர் மோடி, இந்த இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பார்ட்னர்ஷிப்பை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். இப்போது அவர்கள் கூறியது போல, இப்போது மற்றொரு பார்ட்னர்ஷிப்புக்கான நேரம். இந்த முறை அனைத்து இந்தியர்களும் கொரோனாவுக்கு எதிராக போராட ஒன்றிணைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.