ரசிகர் கூட்டம்
தோனி, விராட் கோலி ஆகியோர் வரவுக்குப் பின் இந்திய கிரிக்கெட்டுக்கு இளம் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது. தோனி கடவுள் அளவுக்கு அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
எல்லை மீறி..
அது சமூக வலை தளங்களோடு இருந்தால் பரவாயில்லை. அதுவே எல்லை மீறி மைதானத்துக்குள் நுழைவது என்றெல்லாம் ஆகும் போது தான் சிக்கல் பெருத்து விடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் கிரிக்கெட் போட்டிகளின் இடையே நுழைந்து அவர்கள் செய்யும் காரியம் எல்லாம் வேற லெவலில் தான் இருக்கும்.
ஆசிர்வாதம், செல்பி
ஆசிர்வாதம் வாங்குவது, செல்பி எடுப்பது, கட்டிப் பிடிப்பது என அட்டகாசம் செய்வார்கள். அது தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றாலும், கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
நடவடிக்கை இல்லை
இதற்கு முன்பு பல முறை தோனி, கோலி ரசிகர்கள் அத்துமீறி இருந்தாலும், அவர்கள் மீது விசாரணையை தாண்டி பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் மொஹாலி காவல்துறை அதிரடியாக வழக்கு போட்டு சிறையில் தள்ளி இருக்கிறார்கள்.
இரண்டாவது டி20
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் பேட்டிங் செய்த போதும் அத்துமீறல்கள் நடந்தன. மூன்று ரசிகர்கள் காவல்துறையை ஏமாற்றி மைதானத்துக்குள் நுழைந்தனர். மூவரையும் பிடித்து விசாரணை செய்தது காவல்துறை.
ஆட்டம் காட்டினார்
"ஏ" பிளாக் பகுதியில் இருந்து சந்தீப் குமார் என்ற விராட் கோலி ரசிகர், கோலியுடன் கை குலுக்க வேண்டும் என அத்துமீறி இருக்கிறார். அவர் காவல்துறை அதிகாரி ஒருவரை ஏமாற்றி, ஆட்டம் காட்டி உள்ளே நுழைந்துள்ளார்.
மற்ற இருவர்
அடுத்து "பி" பிளாக் பகுதியில் இருந்து ராஜேஷ் குமார் என்பவர் தடுப்பை எகிறிக் குதித்து உள்ளே நுழைந்துள்ளார். பவன் குமார் என்பவர் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தடுக்க வந்த போது, அவரை மீறி, உள்ளே நுழைந்தார்.
என்ன வழக்கு?
தற்போது இந்த மூன்று குமார்ககளும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் மீது காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடும் சிக்கலில் உள்ளனர்.