இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை
கடந்த 2012 முதல் இந்தியா, பாகிஸ்தானோடு கிரிக்கெட் தொடர்களில் ஆட மறுத்து வருகிறது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது தான் காரணம். இதனால், இந்தியா இரண்டு தொடர்களில் பாகிஸ்தானோடு ஆட ஒப்புக்கொண்டு பின்னர் அரசியல் காரணங்களால் மறுத்து விட்டது. அதற்கு இழப்பீடு கோரி பாகிஸ்தான் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது.
தனி தொடரில் ஆட மறுக்கும் இந்தியா
அரசியல் காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தானோடு தனி தொடரில் கிரிக்கெட் ஆட மறுத்து வந்தாலும், ஐசிசி நடத்தும் பல நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களான உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் பாகிஸ்தானோடு ஆடி வருகிறது. தனி தொடர்களில் ஆட இந்தியா மறுக்கும் காரணம், இந்தியா பாகிஸ்தானிற்கு சென்று கிரிக்கெட் ஆடுவதில் உள்ள பாதுகாப்பு சிக்கல் தான். ஆனால், இந்தியா மட்டுமின்றி எந்த நாடும் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடுவதில்லை. அதற்கு பதில் ஐக்கிய அரபு நாட்டில் தான் பாகிஸ்தான் தன் சொந்த மண் போல கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. அப்படி இந்தியாவும் அங்கே சென்று பாகிஸ்தானோடு தனி தொடர்களில் பங்கேற்க முடியும். அப்படி ஒருவேளை இந்தியா, பாகிஸ்தானோடு தொடரில் ஆடினால், ஒப்பந்தப்படி பாகிஸ்தான் இந்தியா வந்து தொடரில் பங்கேற்க வேண்டும். இந்த இரண்டு சிக்கல்களை தவிர்க்கவே இந்தியா, தனி தொடரில் பாகிஸ்தானோடு கிரிக்கெட் ஆட மறுத்து வருகிறது.
இந்தியாவுக்கு தான் பாதிப்பு
இதனால், இந்தியாவிற்கு தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற வேண்டியது. எனினும், பாகிஸ்தான் இந்தியாவில் ஆட மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், வேறு வழியின்றி ஐக்கிய அரபு நாட்டில் தொடரை நடத்த பிசிசிஐ ஒப்புக்கொண்டது. இதனால், பெரியளவில் பிசிசிஐ-க்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அது போல, இந்திய மகளிர் அணி, உலகக்கோப்பை தொடரின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மறுத்ததால், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கியது ஐசிசி.
எஹ்சான் மானி சொல்வது என்ன?
இது பற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி, "இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடினால், உலகம் முழுவதிலும் இருந்து 100 கோடி பேர் அந்த போட்டியை கண்டு களிப்பார்கள். பழையதை மறந்து விடுவோம், அடுத்து நடக்க உள்ளதை நாம் சிந்திக்கலாம். கிரிக்கெட்டில் அரசியல் இருந்தால், அதை அரசியல்வாதிகள் பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வார்கள். அது தவறு" என கூறியுள்ளார்.