107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், இந்தியா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வரும் 22ம் தேதி 3வது போட்டி
முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி தோல்வியுற செய்த நிலையில், தற்போது இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கில் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
அதிகமாக உணர்ச்சிவசம்
எப்போதுமே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர் என்ற பட்டத்தை கைகொண்டுள்ள விராட் கோலி, மேற்கிந்தியாவிற்கு எதிரான இந்த தொடரிலும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரர்களை வம்பிழுத்தார்.
கோலியின் நோட்புக் சைகை
இந்தியா -மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 போட்டியில் கெஸ்ரிக் வில்லியம்சின் பந்தில் சிக்சரை விளாசிய கோலி, அதையடுத்து நோட்புக் செய்கையை நிகழ்த்தினார். இது கடந்த 2017ல் கோலியை நோக்கி கெஸ்ரிக் வில்லியம்ஸ் செய்த செய்கை.
வாயை மூடுங்கள் செய்கை
இதையடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சொற்ப ரன்களில் விராட்டை அவுட்டாக்கிய கெஸ்ரிக் வில்லியம்ஸ், அவரை பார்த்து வாயை மூடுங்கள் என்னும்படியான செய்கையை செய்தார். இது வழக்கமாக எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும்போது விராட் செய்யும் செய்கையாகும்.
பொல்லார்டும் டக் அவுட்
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் கோலியை எதிரணி கேப்டன் பொல்லார்டு டக் அவுட் செய்தார். இதையடுத்து, அவர் முகமது ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆனபோது, தனது ஆக்ரோஷமான செய்கையை செய்து பொல்லார்டை கோலி வெறுப்பேற்றினார்.
காரணம் விளங்கவில்லை
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஏன் மைதானங்களில் அனிமேஷன் தனமான செய்கைகளை தொடர்ந்து செய்கிறார் என்று தனக்கு விளங்கவில்லை என்று பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
பொல்லார்டு கேள்வி
விராட் கோலியின் அனிமேஷன் தனமாக செய்கைகளுக்கு காரணம் என்ன என்று கேட்டுள்ள பொல்லார்டு, அதை அவரிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.