சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் சர்வதேச டி20 தொடரின் முதல்நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று துவங்கவுள்ளது. இந்த தொடரில் வரும் 11ம் தேதிவரை மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
இளம் வீரர்கள் குறித்து மகிழ்ச்சி
இந்த போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு, அணியில் பிராண்டன் கிங், கெசரிக் வில்லியம்ஸ் உள்ளிட்ட புதிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிறப்பான இளம் வீரர்கள் தேர்வு
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கீரன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
பொறுமை காப்பது அவசியம்
பிராண்டன் கிங், காரி பியரி, செர்பான் ரூதர்போர்டு, கேசரிக் வில்லியம்ஸ் மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகிய வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் திறமைகளை மதிப்பிட பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்றும் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
குடை கொண்டு காப்பது அவசியம்
கிரிக்கெட் உலகின் கழுகுகளிடம் இருந்து இந்த இளம் திறமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ள பொல்லார்டு, சமயத்தில் குடை கொண்டு அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம்
இந்தியாவுடன் அதிக போட்டிகளை விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டிய பொல்லார்டு, இந்தியாவுடனான கடந்த கால தொடர்களில் செய்த தவறுகளை தற்போது மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
பொல்லார்டு ஒப்புதல்
சர்வதேச அளவில் வலிமைமிக்க அணியாக உள்ள இந்தியாவுடன் விளையாடுவதை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளதாக பொல்லார்டு தெரிவித்துள்ளார். தற்போது தங்களிடம் உள்ளதைக் கொண்டு குழு முயற்சியாக வலிமையான இந்திய அணியை எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இடைவெளியை நிரப்புவது சாத்தியமில்லை
சுனில் நரேன், ஆன்ட்ரே ரசல், டுவேன் பிராவோ போன்ற திறமை மிக்க வீரர்கள் விட்டுசென்ற இடைவெளியை தற்போதுள்ள புதிய வீரர்களை கொண்டு நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ள பொல்லார்டு, இந்த மூத்த வீரர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெறும்போது, இந்த இடைவெளியை நிரப்புவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.