அதிக டபுள் செஞ்சுரிகள்
2010ல் சச்சின் டபுள் செஞ்சுரி போட்ட பிறகு வரிசையாக பலரும் ஒரு நாள் போட்டிகளில் டபுள் செஞ்சுரி போட ஆரம்பித்தனர். ஷேவாக் போட்டார். பிறகு ரோஹித் சர்மா, அதன் பின்னர் கிறிஸ் கெய்ல், மார்டின் குப்தில், பக்கர் ஸமான் என வரிசையாக டபுள் செஞ்சுரி அடித்துள்ளனர். இதில் ரோஹித் சர்மா வேற லெவல் வீரர். அவர் 3 முறை ஒரு நாள் போட்டிகளில் டபுள் செஞ்சுரி போட்டுள்ளார்.
ரோஹித் சர்மா சாதனை
ரோஹித் சர்மாவிடம் இன்னொரு ரெக்கார்டும் உள்ளது. அதாவது ஒரு நாள் போட்டியில் அதிக அளவில் ரன் குவித்த வீரர் அவர்தான். அதாவது 264 ரன்களை ஒரு போட்டியில் குவித்துள்ளார் ரோஹித் சர்மா. ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் இதுபோன்ற சாதனைகள் எதுவுமே இல்லாமல் வறட்சியாக உள்ளது. மொத்தமே 2 டபுள் செஞ்சுரிகள்தான் மகளிர் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை நியூசிலாந்தின் அமலியா கெர் அடித்துள்ளார். இன்னொரு டபுள் செஞ்சுரியை ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் அடித்துள்ளார்.
2 வீராங்கனைகளின் டபுள் சதம்
கெர் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது அவரது சாதனையாகும். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் இதை எடுத்தார். மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் அதிகபட்ச தனி நபர் ரன்னாகும். அதேபோல கிளார்க் டென்மார்க் அணிக்கு எதிராக 229 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த டபுள் செஞ்சுரி முயற்சியில் சற்று பக்கம் வந்தவர் தீப்தி சர்மா.
188 வரை வந்த தீப்தி சர்மா
தீப்தி சர்மா கடந்த 2017ல் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் வரை எடுத்தார். இதுதான் இந்திய வீராங்கனை ஒருவரின் அதிகபட்ச ரன்னாகும். அதன் பிறகு யாரும் இந்த முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில்தான் ஸ்மிருதியால் இது முடியும் என்று கூறியுள்ளார் பூனம் யாதவ். இதுகுறித்து டிவிட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பூனம் பதிலளிக்கையில், ஸ்மிருதி மந்தனா நிச்சயம் டபுள் செஞ்சுரி போட முடியும் என நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுள்ளார் பூனம்.
இந்திய ஸ்பின்னர் பூனம்
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பூனம் யாதவ் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இறுதிப் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. பூனம் யாதவ் இந்த தொடரில் மொத்தம் 10 விக்கெட்களைச் சாய்த்தார். அதில் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட்களைச் சாய்த்து அதிர வைத்தார் பூனம்.