நடைபெறுவதில் சிக்கல்
வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் செப்டம்பர் மாதம் வரையில் வெளிநாட்டினர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
முன்னாள் நியூசிலாந்து கேப்டன் அறிவுரை
இந்நிலையில் அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடத்தலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதையும் தள்ளி வைக்கலாம்
இதனிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலக கோப்பை தொடரை மேலும் தள்ளி வைக்கவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் மூன்று தொடர்களும் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தாதவண்ணம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீரர்கள், ஊழியர்கள் சம்பளம் கிடைக்கும்
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்சின் பயிற்சியாளராக விளங்கிவரும் மெக்கல்லம், ஐபிஎல் போட்டிகள் தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் மட்டுமே, வீரர்கள் மற்றும், அதுசார்ந்த ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
12 நாடுகள் பங்கேற்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் டி20 உலக கோப்பை உள்ளிட்ட பல கிரிக்கெட் போட்டிகளின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.