பெங்களூர்: இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் பந்து வீச்சு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சந்தேகமடைந்தள்ளது. இதையடுத்து அவரை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மேலும் அவரது பந்து வீச்சு முறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் பெங்களூரில் முகாமிட்டுள்ளார். தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் டெஸ்ட் நடுவரான ஏவி. ஜெயப்பிரகாஷ், இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர் பிசிசிஐயின் சட்ட நடவடிக்கைக் கமிட்டியின் உறுப்பினரும் ஆவார். சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஓஜா அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதைச் சரி செய்ய அவர் பெங்களூர் வந்திருப்பதாகவும் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஓஜா இந்திய அணியில் இடம் பெறவில்லை. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தென் மண்டல துலீப் டிராபி போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
28 வயதான ஓஜா, 24 டெஸ்ட், 18 ஒரு நாள் போட்டிகள், 6 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஓஜாவின் பந்து வீச்சு சந்தேகமாக இருப்பதாக கடந்த 2012ம் ஆண்டே பிஷன் சிங் பேடி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சமீப காலமாக சந்தேக கேஸ் பவுலர்கள் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தடை விதிக்கப்பட்டார். இதையடுத்து ஓஜாவை சரி செய்யும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.