பிரவீன் தாம்பே
பிரவீன் தாம்பே 41 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். ஐபிஎல் தொடரில் ஆடிய வயதான வீரரும் அவர் தான். ஐபிஎல் தொடரில் ஆடிய பின் தேசிய அளவிலான உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்றார். கிரிக்கெட் பயிற்சியாளரான அவர் தன் ஆர்வம் காரணமாக களத்தில் வீரராக மாறினார்.
அறிமுகம்
2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அறிமுகம் ஆகி ஐபிஎல்-இன் வயதான வீரர் என்ற வரலாறு படைத்தார். லெக் ஸ்பின்னராக ஓரளவு சிறப்பான செயல்பட்டை வெளிப்படுத்தினார்.
விக்கெட்கள்
ஐபிஎல்-இல் இதுவரை அவர் 33 போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 28 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். அவரது பவுலிங் சராசரி 30.5 ஆகும். இடையே ஒரு சில ஐபிஎல் சீசன்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை தேர்வு செய்தது. 48 வயதான வீரரை ஏன் அந்த அணி தேர்வு செய்தது என அப்போது கேலி செய்யப்பட்டது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
அனுமதி மறுப்பு
ஆனால், பிசிசிஐ அவருக்கு அனுமதி மறுத்தது. அதற்கு முக்கிய காரணம், அவர் அபுதாபியில் நடைபெற்ற டி10 எனும் பத்து ஓவர் லீக் தொடரில் பங்கேற்றார். அப்போது அவர் பிசிசிஐ அனுமதி பெறவில்லை. அது குறித்த சர்ச்சை எழுந்ததால் அவருக்கு 2020 ஐபிஎல் தொடரில் ஆட அனுமதி மறுக்கப்பட்டது.
பிசிசிஐ விதி
பிசிசிஐ விதிப்படி இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற பின் மட்டுமே அனுமதி பெற்று வெளிநாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் பங்கேற்கலாம். அதன் காரணமாக பிரவீன் தாம்பேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்றார்.
மீண்டும் மறுப்பு
அந்த ஏலத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் தேர்வு செய்தது. இந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதே உரிமையாளர்களால் நடத்தப்படும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஆடவும் பிசிசிஐ அவருக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது.
ஓய்வு பெற வேண்டும்
பிரவீன் தாம்பே முதலில் ஓய்வை அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே அவரை கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அனுமதிக்கலாமா? என்பதை பற்றி யோசிக்க முடியும் எனவும், அவர் ஏற்கனவே விதியை மீறி அபுதாபி டி10 லீக்கில் ஆடி இருக்கிறார் எனவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.