சிபிஎல் தொடர்
கரீபியன் லீக் தொடரில் உள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தாம்பே சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கரிபீயன் லீக் தொடரில் ஆட தேர்வாகியுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. பிசிசிஐ ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழை அளித்தால் அவர் சிபிஎல்லில் விளையாட முடியும். எனவே பிசிசிஐ அனுமதிக்காக தற்போது தாம்பே காத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க இன்டோரில்
இந்த ஆண்டு தொடருக்கான வீரர்களை சிபிஎல்லின் 6 அணிகளும் தேர்வு செய்துள்ளன. இந்த தொடரானது ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ம் தேதி வரை நடைபெறும். மேற்கு இந்தியத் தீவுகளில் போட்டிகள் நடைபெறும். அனைத்துப் போட்டிகளையும் இன்டோரில் நடத்த முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வீரர்களாக தாம்பே, ரஷீத் கான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராஸ் டெய்லர், கார்லஸ் பிராத்வெய்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிச்சம் போட்ட ஐபிஎல்
தனது 41வது வயதில்தான் தாம்பேவுக்குத் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல்லில் அந்த வயதில்தான் அவர் அறிமுகமானார். அறிமுக தொடரிலேயே அவர் அதிரடியாக பந்து வீசினார். மொத்தம் 33 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சு சராசரியும் மோசமாக இல்லை. 30.5 என்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஒரு வடிகால்
பல வீரர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்காமல் அவர்கள் கவனிக்கப்படாமலேயே போய் விடுகின்றனர். அவர்களுக்கு ஐபிஎல்தான் சரியான வடிகாலாக உள்ளது. இல்லாவிட்டால் தாம்பே போன்ற திறமைகள் யார் கண்ணுக்கும் தெரியாமலேயே போயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கிடைத்த ஐபிஎல் வாய்ப்புகள்தான் இன்று அவர்களை கடல் கடந்து சிபிஎல் வரை கொண்டு வந்துள்ளன.