மும்பை: தன்னிடம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்ட பெண் செய்தியாளரைப் பார்த்து கோபமாகப் பேசினார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்களுக்கும் - பிரபலங்களுக்கும் இடையே இப்போது நேரம் சரியில்லை போலும். அனுஷ்கா சர்மா குறித்து எழுதப் போய் ஒரு செய்தியாளரை பிடித்து கடுமையாக திட்டித் தீர்த்து விட்டார் கோஹ்லி. ஆனால் கடைசியில் கட்டுரையை எழுதியது அந்த செய்தியாளர் இல்லை. இந்த விவகாரம் தற்போது பெரிதாகியுள்ளது. ஐசிசி வரை போய் விட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்ட பெண் செய்தியாளரிடம் அவர் கோபமாகப் பேசப் போக அது சர்ச்சையாகி விட்டது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய சீருடை வெளியீட்டு நிகழ்ச்சியின்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. சீருடை வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ப்ரீத்தி ஜிந்தா. அப்போது ஒரு பெண் செய்தியாளர், உங்களுக்கும், நெஸ் வாடியாவுக்கும் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் இவரும் ஒருவர்) இடையே பிரச்சினை நிலவுவதால், எப்படி அணியை நடத்துவீர்கள் என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் ப்ரீத்திக்கு கோபம் வந்து விட்டது. உடனே அந்த செய்தியாளரைப் பார்த்து, முதலில் நீங்களும் ஒரு பெண். ஒரு பெண்ணாக நடக்க முயற்சியுங்கள். பத்திரிகையாளராக இருக்க முயற்சிக்காதீர்கள் என்றார் கோபமாக.
அவரது கோபமான பேச்சைக் கேட்டு அந்த செய்தியாளர் ஷாக் ஆகி விட்டார். உடன் இருந்த செய்தியாளர்களும் அதிர்ச்சியாகி விட்டனர்.