ஏற்பாடு பாதுகாப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் நடைபெறாமல் இருந்த சர்வதேச கிரிக்கெட் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கராச்சியில் விளையாட இலங்கை அணி ஒப்புக் கொண்டதையடுத்து சர்வதேச கிரிக்கெட் மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் புத்துயிர் பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் சுற்று பயணம்
இந்நிலையில்தான் 10 வருடம் கழித்து இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.
பங்கேற்கவில்லை
இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை அணியை சேர்ந்த 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருந்தனர். எனினும் ஒரு வழியாக 10 வருடத்திற்கு பின் இலங்கை அணி பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒப்புக் கொண்டு சென்றது.
சிறப்பு பூஜைகள்
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் பாகிஸ்தான் செல்லும் முன் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்து இருந்தனர். புத்த முறைப்படி நிறைய வழிபாடுகளை அவர்கள் செய்தனர். அதேபோல் இப்பொழுது இலங்கை அணி வீரர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
|
பயங்கரவாத அச்சுறுத்தல்
இதற்கிடையில் கிரிக்கெட் தொடரில் விளையாட வந்து இருக்கும் இலங்கை அணிக்கு தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அளவிற்கு பாதுகாப்பு தந்துள்ளது. ஆம் இலங்கை வீரர்களுக்கு தற்போது ஜனாதிபதி அளவிலான பாதுகாப்பு வழங்கி இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது தொடர்பாக பாகிஸ்தானியர்கள் சிலர் வெளியிட்ட வீடியோ ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
|
என்ன வீடியோ
அந்த வீடியோவில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த இலங்கை அணிக்கு 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பின்னாடியே சென்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்ற இந்த கார்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கவுதம் கம்பீர் ட்விட்
இந்த வீடியோவை இப்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இந்த விடியோவை வெளியிட்டு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய பாகிஸ்தான் தலைவர்களையும் வீரர்களையும் விமர்சித்துள்ளார்.