அசத்தல் அறிமுகம்
ப்ரித்வி ஷா போன்ற ஒரு அறிமுகத்தை எந்த இளம் வீரரும் பெற்று இருக்க முடியாது. 18 வயதில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார்.
ஆஸி. தொடருக்கு முன் காயம்
தன் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தார். அதன் பின் சவாலான ஆஸ்திரேலியா தொடருக்கு அவர் தயாராகி வந்த போது, பயிற்சிப் போட்டியில் காயம் ஏற்பட்டது.
ஊக்கமருந்து சர்ச்சை
அதனால், இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். பின், காயத்தில் இருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். அப்போது அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
பில்டப் சைகை
அதனால், எட்டு மாதங்கள் தடை செய்யப்பட்டார். தடைக்குப் பின் மீண்டும் மும்பை அணியில் இடம் பெற்று ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வருகிறார். இந்த தொடரில், முதல் போட்டியில் அரைசதம் அடித்த போது தன் பேட் தான் பேசும் என அவர் சைகை செய்தது கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையாக இருந்தது.
இரட்டை சதம் அடித்தார்
உள்ளூர் போட்டியில் இந்த பில்டப் எல்லாம் தேவையா? என பலரும் கேட்டனர். அடுத்து பரோடா அணிக்கு எதிராக அதிரடி இரட்டை சதம் அடித்து இந்திய அணிக்கு திரும்புவதை உறுதி செய்தார் ப்ரித்வி ஷா.
பயிற்சிப் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஏ அணியில் இணைந்து அவர் பயிற்சிப் போட்டிகளில் ஆடுவார் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன் ரஞ்சி தொடரில் அவர் காயத்தில் சிக்கினார்.
பங்கேற்க வாய்ப்பில்லை
அதனால், அவர் நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில் மட்டுமல்லாது, டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாது என கூறுகின்றனர் மும்பை அணியை சேர்ந்த சிலர். அவரை பற்றிய மேலும் சில அதிர வைக்கும் தகவல்களையும் கூறினர்.
வாழ்க்கை முறை மோசம்
ப்ரித்வி ஷா முன்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பும், இப்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பும் காயத்தில் சிக்க முக்கிய காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை தான் என கூறுகின்றனர். அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கவும் அதுவே காரணம் என்று அவர் தடை செய்யப்பட்ட போது கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
கோபத்தில் மேலாளர்
மும்பை அணியில் ஆடி வரும் ப்ரித்வி ஷா மீது பல ஒழுங்கீன புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பரோடா அணிக்கு எதிராக அவர் இரட்டை சதம் அடித்த போட்டியில் கூட அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து மும்பை அணி மேலாளர் கடும் கோபத்துடன் புகார் அளித்துள்ளராம்.
இது தான் காரணம்
அது என்ன நடந்தது, என்ன புகார் என்பது பற்றி வெளிப்படையாக கூறப்படவில்லை. ஆனால், இது போன்ற விஷயங்களால் தான் ப்ரித்வி ஷா இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெடுத்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.