சொதப்பிய பிரித்வி ஷா
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் கோலி நம்பிக்கை வைத்து இளம் வீரர் பிரித்வி ஷாவை துவக்க வீரராக களமிறக்கினர். கடந்த சில போட்டிகளில் அவர் சொதப்பினாலும் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
கடுமையான விமர்சனங்கள்
ஆனால் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கும் வண்ணம் பகலிரவு போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினார் பிரித்வி ஷா. அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் 0 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான துவக்கத்தை அவர் இந்திய அணிக்கு அளித்தார். இதையடுத்து அவரது பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஷா பதில்
இந்நிலையில், நாம் செய்யும் ஒரு முயற்சி குறித்து நம்மை குறைவாக மதிப்பிட்டு ஒருவர் விமர்சனம் செய்வதற்கு காரணம் நம்மால் அதை செய்து முடிக்க முடியும் ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
மூடி, கான் விமர்சனம்
பிரித்வி ஷாவின் இந்த மோசமான போட்டிக்கு அவரை குற்றம் சொல்ல முடியாது மாறாக அவரை தேர்வு செய்தவர்களையே குற்றம் சாட்ட வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார். இதில் அவர்கள் தான் தோல்வியடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவர் பார்ம் இல்லாத நிலையிலேயே இந்த போட்டியில் விளையாடியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதே கருத்தையே முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கானும் வெளிப்படுத்தினார்.