6 மாதங்கள் தடை பெற்ற பிரித்வி ஷா
ஊக்க மருந்து சோதனையில் இந்த ஆண்டு துவக்கத்தில் 6 மாதங்கள் தடை பெற்றிருந்த பிரித்வி ஷா, அதிலிருந்து வெளிவந்து தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
5 போட்டிகளில் 3 அரைசதங்கள்
தடைக்கு பிறகு சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பங்கேற்று ஆடிய பிரித்வி ஷா, 5 போட்டிகளில் 3 அரை சதங்களை அடித்து, தான் மீண்டு வந்துவிட்ட சேதியை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
வேகமான இரட்டை சதம்
இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் ரஞ்சி கோப்பை தொடருக்காக பரோடா அணிக்கு எதிராக மும்பை அணி களமிறங்கிய போட்டியில் இளம் வீரர் பிரித்வி ஷா தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடர்
ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை ரவி சாஸ்திரி மற்றும் ராஜேஷ் போரா ஆகியோர் வேகமான இரட்டை சதங்களை அடித்துள்ள நிலையில், தற்போது இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் பிரித்வி ஷா.
156 பந்துகளில் விளாசிய ராஜேஷ் போரா
கடந்த 1985ல் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் 123 பந்துகளில் இரட்டை சதத்தை தொட்டார் ரவி சாஸ்திரி. அடுத்ததாக, கடந்த 1991ல் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் ராஜேஷ் போரா 156 பந்துகளில் வேகமான தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
வதோதராவில் பிரித்வி ஷா சாதனை
அடுத்த ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணியில் இடம்பெறும் முனைப்பில் ஆடிவரும் பிரித்வி ஷா, தற்போது ரவிசாஸ்திரி, ராஜேஷ் போராவிற்கு அடுத்ததாக 3வது வேகமான இரட்டை சதத்தை அடித்துர். 174 பந்துகளில் இவர் இந்த இலக்கை எட்டியுள்ளார்.
முதல் இன்னிங்சில் 66 ரன்கள்
போட்டியில் 84 பந்துகளில் முதல் சதத்தை நிறைவு செய்த பிரித்வி, தொடர்ந்து அடுத்த 94 பந்துகளில் அடுத்த சதத்தையும் விளாசி பரோடா அணியின் பார்கவ் பட்டின் பந்துவீச்சில் அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் பிரித்வி, 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.