இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியா -நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்களை கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையில் வரும் சனிக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
விராட் கோலி ஆதரவு
நடந்து முடிந்துள்ள இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சர்வதேச போட்டிகளில் அனுபவமற்ற பிரித்வி ஷாவை துவக்க வீரராக களமிறக்கியதும், அவர் சொற்ப ரன்களில் வெளியேறியதும் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் சிறப்பான ஆட்டத்தை அடுத்துவரும் போட்டிகளில் வெளிப்படுத்துவார் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அச்சத்துடன் விளையாடிய பிரித்வி
துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அந்த இடத்தில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 16 மற்றும் 14 ரன்களை இரண்டு இன்னிங்சிலும் அடித்து முறையே டிம் சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அவுட்டானார்.
பயிற்சியில் இடம்பெறாத பிரித்வி
இந்நிலையில் பிரித்வி ஷாவின் காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக அவர் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே அவருக்கு இன்று இரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு, அவரது பிட்னஸ் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இதையடுத்து அவர் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி சிறப்பு கவனம்
இதனிடையே, இன்றைய பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லுக்கு, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கடந்த சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா இடம்பெறாதநிலையில், சுப்மன் கில், மயங்க் அகர்வாலுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அணி நம்பிக்கை
ரோகித் சர்மா, ஷிகர் தவான் இல்லாமல் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட பிரித்வி ஷா தற்போது காலில் வீக்கம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ள வீக்கம் சிறிய அளவிலேயே உள்ளதாகவும், அதனால் அவர் கண்டிப்பாக நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.