பெங்களூர்: விஜய் ஹசாரே உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், அம்பயர்கள், ஹெல்மெட் அணிந்தபடி நாட்டாமை செய்து வருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நடுவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பது இதுதான் முதல்முறை.
விஜய்ஹசாரே எனப்படும் உள்நாட்டு ஒன்டே போட்டி தொடர் தற்போது நடந்து வருகிறது. பெங்களூர் அடுத்த ஆலூரில் கேரளா-ரயில்வே அணிகள் நடுவே இன்று நடைபெற்ற போட்டியின்போது, நடுவர் பசிம் பதக் ஹெல்மெட் அணிந்தபடி நுடவர் பணியை பார்த்து வந்தார்.
கடந்த வாரம் திண்டுக்கல்லில் தமிழகம்-பஞ்சாப் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியின்போது, நடுவராக பணியாற்றிய, ஜான் வார்ட், பேட்ஸ்மேன் அடித்த பந்து பட்ட காயத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போதைய டி20 காலகட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அதிக வேகத்தில் ஷாட் அடிக்கிறார்கள். எனவே, உள்ளூர் கிரிக்கெட்டிலும், நடுவர்கள் உஷாராக ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ளனர். இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அம்பயர் ஹெல்மெட் அணிந்திருந்தது இதுதான் முதல் முறை.
உலகின் பல பகுதிகளிலும், நடுவருக்கு ஹெல்மெட் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுக்க தொடங்கிவிட்டன. ஓய்வு பெற்ற பிரபல நடுவர் சைமன் டவுஃபல் இதே கோரிக்கையை சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.