2வது டெஸ்ட் போட்டி
இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் தீவிரத்தில் இரு அணிகளும் உள்ளன. இந்நிலையில் குழந்தை பிறப்பையொட்டி அடுத்த 3 போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்பியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
அடுத்த 3 போட்டிகளில் கேப்டன்
அவருக்கு பதிலாக துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளின் கேப்டனாக செயல்பட உள்ளார். துணை கேப்டனாக சத்தீஸ்வர் புஜாரா செயல்பட உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பானது -ரஹானே மகிழ்ச்சி
இந்நிலையில் இந்திய அணியை தலைமையேற்று நடத்துவது மிகவும் சிறப்பானது என்று கேப்டன் அஜிங்க்யா ரஹானே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது சிறப்பான வாய்ப்புதான் என்றாலும் பொறுப்பும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல், அணியை சிறப்பாக கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்மீது எந்த கவனமும் இல்லை
நாளைய பாக்சிங் டே டெஸ்ட்டையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ரஹானே, இந்திய வீரர்கள் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட வேணடியது அவசியம் என்பதால், தன்மீது எந்த கவனமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எதிரணியை வீழ்த்தும் நோக்கத்திலேயே ஆஸ்திரேலியா விளையாடும் என்றாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நம்மீது கவனம் வைத்து இந்திய அணி விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி வெற்றி
கடந்த 2017ல் தர்மசாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியை கேப்டனாக ரஹானே வழிநடத்தினார். இதனிடையே, நம்முடைய வழிமுறைகளின்படி நாம் செயலாற்ற வேண்டும் என்ற தெளிவை அந்த போட்டி கொடுத்ததாக ரஹானே கூறியுள்ளார்.