டி20 தொடர்
பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.
மீண்டும் பி.எஸ்.எல்
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. அனைத்து அணி வீரர்களும் மே 26ம் தேதி அபுதாபி புறப்படுகின்றனர். இதற்காக மே 25ம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் கொரோனா நெகட்டீவ் என்ற சான்றிதழுடன் பபுளுக்குள் வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அங்கு புறப்படுவதற்கு முன்னதாக ஒரு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா உறுதி
இந்நிலையில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அன்வர் அலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் அணி பபுளுடன் சேர்வதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் கராச்சியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். கொரோனா விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகவும் கடும் விதிமுறைகள் விதித்துள்ளதால் அன்வர் அலி தொடரில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
பிஎஸ்எல் தொடர் வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டால் ஐபிஎல் தொடரையும் அங்கு நடத்துவதற்கு பிசிசிஐ-க்கு நம்பிக்கை கிடைக்கும். ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் பிசிசிஐ-ம் ஐபிஎல் தொடரை நடத்துவதில் நன்கு சிந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.