இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வந்தநிலையில், அதில் விளையாடிவந்த வெளிநாட்டு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 17ம் தேதி இதன் எஞ்சிய அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் போட்டிகள் வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் அடையாளமாக விளங்கிவரும் ஐபிஎல் தொடர் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்திற்குரியதாக இருந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் அணிகளை கொண்டு லீக் போட்டிகளை நடத்திவருகின்றன. பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடத்தப்பட்டு, வந்தது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு இருந்த போதிலும், இந்த தொடர் சிறப்பாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இதில் விளையாடிய வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த தொடர் உடனடியாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தொடரில் இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மட்டுமே பாக்கி உள்ளன. அரையிறுதியில் முல்தான் சுல்தான் அணியும், பெஷாவர் ஷால்மி அணியும் இதேபோல கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கலந்தர் அணியும் மோதவிருந்தன. இந்தப் போட்டிகள் கடந்த 17ம் தேதி லாகூரின் கடாபி மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 18ம் தேதி இறுதிப்போட்டியும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எஞ்சிய போட்டிகள் வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார். அடுத்த 6வது சீசனுக்கு முன்னதாக எஞ்சிய போட்டிகள் நடத்தப்படும் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணி அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். இந்தப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.