என்ன செய்வதென்றே தெரியாமல்..
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது ஐபிஎல், கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் என தீவிரமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் இருக்கிறார்கள். அதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், செய்யும் எல்லாவற்றையும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
புஜாரா என்ன செய்கிறார்?
புஜாரா தன் குடும்பத்தினருடன் தான் செலவிட்டு வருகிறார். தன் மகளுடன் விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் புஜாரா. அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருக்க வேண்டும். கவுன்டி அணியான குளுசெஸ்டர்ஷயர் அணியில் அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும்.
கிரிக்கெட் தடை
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் தொடர் கூட கால வரை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதை ரொம்ப மிஸ் செய்கிறார்?
புஜாரா இந்த லாக்டவுன் நேரத்தில் எதை ரொம்ப மிஸ் செய்கிறார்? என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இது தான். பேட்மிண்டன் போட்டிகளை அதற்கான வெளிப்புற கோர்ட்களில் ஆட முடியவில்லை என்றார்.
பேட்மிண்டன் ஆடுவது பிடிக்கும்
கிரிக்கெட்டை தவிர தனக்கு வெளியில் பேட்மிண்டன் ஆடுவது தான் மிகவும் பிடித்த விளையாட்டு என கூறினார் புஜாரா. லாக்டவுன் காரணமாக வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பேட்மிண்டன் ஆட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
யாருடன் ஆடுவார்?
தன் சொந்த ஊரான ராஜ்கோட்டில் அவர், வார இறுதி நாட்களில் பேட்மிண்டன் கோர்ட்களுக்கு சென்று ஆடுவாராம், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அதை மிகவும் மிஸ் பண்ணுவதாக அவர் கூறி உள்ளார். மேலும், வீட்டில் தன் சக கிரிக்கெட் நண்பர் ஜெயதேவ் உனட்கட் மற்றும் தன் மனைவியுடன் ஆடுவேன் என குறிப்பிட்டார்.
அதெல்லாம் ஜெயிக்க விட மாட்டேன்
தன் மனைவி இப்போது தான் பேட்மிண்டன் ஆட கற்றுக் கொள்வதாகவும், அவரை அந்த விளையாட்டில் தான் வெற்றி பெற விட மாட்டேன் என்றும் கூறினார் புஜாரா. பேட்மிண்டனில் யாரையும் வெற்றி பெற விட மாட்டேன். அது சாத்தியமே இல்லை என்றார் அவர்.
ஏன் இப்படி?
தன் மனைவியிடம், அவர் அதில் தேர்ச்சி பெற்று தன்னை வீழ்த்த வேண்டும் என தான் கூறி வருவதாகவும் தன்னை வீழ்த்த வைத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த தான் விரும்பவில்லை என்றும், ஒரு விளையாட்டு வீரராக மற்றவர் நம்மை விட அதிக பலம் பெற்றே தம்மை வீழ்த்த வேண்டும் தான் நினைப்பதாக கூறி உள்ளார் புஜாரா.