பஞ்சாப் அணி கேப்டன்
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் 3 அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருந்த பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றி, கே.எல்.ராகுலை கேப்டனாக நியமித்தனர். எனினும் அந்த அணியின் தோல்வி முகம் மாறவே இல்லை. இதனால் கே.எல்.ராகுலை கழட்டிவிட்டுவிட்டு, வேறு கேப்டனை நியமிக்க அந்த அணி முடிவெடுத்துள்ளது. கே.எல்.ராகுலும் லக்னோ அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மூன்று வீரர்கள்
இந்நிலையில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனை நியமிக்க 3 வீரர்களுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தேர்வாக இயான் மோர்கன் உள்ளார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கடந்த சீசனில் நியமிக்கப்பட்ட மோர்கன், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். இதே போல டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியையும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். எனினும் அவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதால் அவரை கழட்டிவிட கேகேஆர் அணி முடிவெடுத்துள்ளது. ஆனால் அவர் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் சிறந்த கேப்டன்சி திறமை இருக்கும் என்ற நம்பிக்கையில் பஞ்சாப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்
2வது தேர்வாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் குறிவைக்கப்பட்டுள்ளார். ப்ளே ஆஃப் செல்லவே சிரமப்பட்டு வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவருக்கு மாற்றாக தற்போது பண்ட் டெல்லி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் இந்தாண்டு ஸ்ரேயாஸை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை பஞ்சாப் அணிக்கு வளைத்துப்போட திட்டமிடப்பட்டுள்ளது. பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அவர் சிறப்பாக இருப்பதால், ஸ்ரேயாஸை கேப்டனாக உறுதி செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்
3வது தேர்வாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை கேப்டனாக நியமிக்க பஞ்சாப் திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த வார்னர் திடீர் கருத்துவேறுபாடு காரணமாக ப்ளேயிங் 11ல் இருந்தே நீக்கப்பட்டார். மேலும் அணியில் இருந்து வெளியேறுவதும் உறுதியாகிவிட்டது. ஆனால் வார்னர் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். மேலும் கேப்டன்சியும் சிறப்பாக இருக்கும் என்பது பஞ்சாப் அணிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.