இரண்டு சுமார் அணிகள்
ஐபிஎல் 2021 தொடரில், 9 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 6 ஆட்டங்களில் தோற்றுள்ளது. மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணிக்கு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத் அணியுடன் பஞ்சாப் மோதியது. இந்த தொடரில், ஹைதராபாத் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் தான் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அடுத்தடுத்து விக்கெட்ஸ்
பஞ்சாப் அணியின் அடிநாதமே லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வாலின் அதிரடி பேட்டிங் தான். ஆனால், இன்று இருவரும் மிக விரைவில் அவுட்டானார்கள். மாயங்க் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 21 ரன்னிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில், 14 ரன்களில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார். பிறகு நிகோலஸ் பூரன் சிக்ஸ் அடுத்து சிறப்பாக இன்னிங்ஸை தொடங்கினாலும் 8 ரன்களில் கேட்ச் ஆனார். தட்டி தட்டி விளையாடிய எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மீண்டும் சொதப்பல்
இதன் பிறகு கடைசி நம்பிக்கையாக இருந்த தீபக் ஹூடா, 13 ரன்களில் அவுட்டாக அதன் பிறகு ராஜஸ்தான் அணியால் மீண்டு வரவே முடியவில்லை. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோட்டல் பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் ஃபெயிலியர் ஆனது. கேப்டனாக லோகேஷ் ராகுல் எவ்வளவோ முயன்றாலும், அந்த அணி ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கிவிடுகிறது. நன்றாக விளையாடும் போட்டியில், கடைசி நேரத்தில் தோற்பது என்பது பஞ்சாப் அணியின் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 5 ரன்கள் கூட அடிக்க முடியாமல் பஞ்சாப் தோற்றது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. 19 ஓவர்கள் வரை ஆட்டத்தில் முழுமையாக டாமினேட் செய்த பஞ்சாப், கடைசி ஓவரில் மிக மோசமாக சொதப்பி தோற்றது. இப்போது ஆரம்பம் முதலே சொதப்பி போட்டியை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போதெல்லாம், கேப்டன் ராகுல் தனது முக பாவனைகளில் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். குறிப்பாக, பூரன் மிக விரைவில் அவுட்டான போது, ராகுல் சற்று கோபமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஷாக் தருமா பஞ்சாப்?
எனினும், பஞ்சாப் பக்கம் இருக்கும் ஒரே பாசிட்டிவ் அம்சம் என்னவெனில், எதிரணியான ஹைதராபாத்தும் தொடர்ந்து வெற்றிப் பெற முடியாமல் தடுமாறி வருகிறது. பவுலிங் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் படு மோசம். வார்னர் அவுட்டாகிவிட்டால் அந்த அணியால் 100 ரன்கள் தாண்டுவதே சிரமமாகிவிடுகிறது. இதனை பஞ்சாப் பவுலர்கள் பயன்படுத்திக் கொண்டால், ஷாக் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கலாம்.