டெஸ்ட் கேப்டனாக விரும்பவில்லை
கடந்த ஜனவரி மாதம் தான் பாப் டூபிளஸிக்குப் பதிலாக குவின்டன் டி காக்கை ஒரு நாள் அணிக்கான கேப்டனாக நியமித்தனர். இந்த நிலையில், அவரை டெஸ்ட் கேப்டனாகவும் அறிவிக்கலாம் என சிலர் ஆலோசனை கூறி வந்தனர். இதையடுத்து டி காக்குடன் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போது தான் டெஸ்ட் கேப்டனாக விரும்பவில்லை என்று டிகாக் கூறி விட்டார்.
கூடுதல் சுமை வேண்டாம்
இதுகுறித்து டிகாக் கூறுகையில், நானும் பெளச்சரும் சாதாரண முறையில் பேசினோம். அப்போது நான் எந்த அளவுக்கு தற்போதைய நிலையில் அழுத்தத்தை உணர்கிறேன் என்பதை அவரிடம் விளக்கினேன். டெஸ்ட் கேப்டன் என்பது கூடுதல் பிரஷராகும். அதை சுமக்க நான் தயாராக இல்லை என்பதையும் பெளச்சரிடம் விளக்கினேன். நிச்சயம் எனக்கு அது கூடுதல் சுமையாகி விடும். ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக தொடர மட்டுமே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அது சரிவராது
எனது தோள்களில் அதிக சுமையை வைக்க நான் விரும்பவில்லை. அது எனக்கு சரிப்பட்டு வராது என்றார் டிகாக். கடந்த 3 மாதமாக தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் விளையாடாமல் உள்ளது. இந்த நிலையில் விரைவில் பயிற்சியில் தான் ஈடுபடப் போவதாக டிகாக் கூறியுள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக தான் காத்திருப்பதாகவும் டிகாக் கூறியுள்ளார்.
உடம்பு சூப்பரா இருக்கு
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடம்பை பிட்டாக வைத்துள்ளேன். வீட்டிலேயே சின்னச் சின்ன பயிற்சிகளைச் செய்து வருகிறேன். ஆனால் முறையான பயிற்சியை இதுவரை எடுக்கவில்லை. அதை செய்வதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். டிகாக் தென்னாப்பிரிக்காவின் அருமையான ஆட்டக்காரர்களில் ஒருவர். விக்கெட் கீப்பராக, தொடக்க ஆட்டக்காரராக இருப்பவர்.
3 அணிகளின் மோதல்
27 வயதான டிகாக், ஜூலை 18ம் தேதிக்காக காத்திருக்கிறார். அன்றுதான் தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. ஈகிள்ஸ், கிங்பிஷர்ஸ், கைட்ஸ் ஆகிய 3 அணிகள் விளையாடவுள்ளன. அதில் டிகாக்கும் கலந்து கொள்ளவுள்ளார். கைட்ஸ் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றுள்ளார். முற்றிலும் பாதுகாப்பான முறையில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.