அஸ்வின் வெளியேறினார்
ஒருகாலத்தில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய அணியின் நிரந்தர சுழற்பந்து வீச்சளராக இவர் வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஒருநாள் தொடர் எதிலும் அவர் சேர்க்கப்படாமல் இருந்தார். அஷ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கினார் கோஹ்லி.
யோ யோ டெஸ்ட்
கடந்த சில மாதமாக அஸ்வின் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்டில் அஸ்வின் கலந்து கொண்டார். இதில் மிகவும் சிறப்பாக பெர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்டையும் முழுவதுமாக முடித்தார். இது இந்திய வீரர்களை அணியில் சேர்ப்பதற்காக செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையாகும்.
அணி அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கடந்த பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.
இலங்கைக்கு சிம்ம சொப்பனம்
பல நாட்களுக்கு பின் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக அஸ்வின் இந்திய அணிக்கு வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் ''இந்திய அணி என் வீட்டு கதவை தட்டும்'' என குறிப்பிட்டார். இப்போது உண்மையாகவே அவர் வீட்டு கதவை பிசிசிஐ தட்டி இருக்கிறது. இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த தமிழர், டெல்லியில் பிட்சில் மீண்டும் தன் சுழல் திறமையை காட்ட காத்து இருக்கிறார்.