கடத்தப்பட்ட அஸ்வின்
தான் இளவயதாக இருந்தபோது தன்னுடைய நண்பருடன் இணைந்து டென்னிஸ் பந்து போட்டிகளில் விளையாடியதாகவும், ஆனால் தான் சாலைகளில் விளையாடுவது தன்னுடைய தந்தைக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார் அஸ்வின். இந்நிலையில் இறுதிப்போட்டியில் தான் விளையாடவிருந்த நிலையில், ராயல் என்பீல்ட் பைக்கில் வந்த 4 -5 பேர் தன்னை கடத்தியதாக தெரிவித்தார்.
எதிரணி ரசிகர்கள்
அவர்கள் பயில்வான்கள் போல இருந்ததாகவும் எதிரணியின் ரசிகர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறினார். கிரிக்பஸ் வீடியோ தொடரான ஸ்பைசி பிட்ச்சிற்காக பேசிய அஸ்வின் தன்னுடைய இளவயதில் தான் கடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு விடுவிப்பு
அவர்கள் தன்னை நேராக ஒரு டீ ஸ்டாலின் கொண்டு சென்றதாகவும், அந்தப் போட்டியில் தான் விளையாடினால் தன்னுடைய கைவிரல்களை வெட்டி விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறினார். தன்னுடைய தந்தை அலுவலகத்திலிருந்து வருவதற்குள் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தான் அந்த போட்டியில் விளையாட மாட்டேன் என்றும் தான் உறுதியளித்ததையடுத்து அவர்கள் தன்னை விடுவித்ததாகவும் அஸ்வின் கூறினார்.
365 விக்கெட்டுகள்
இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிவரும் ஆர் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 365 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.