இந்தியா அபார வெற்றி
இந்தியா -இங்கிலாந்து இடையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் துவங்கவுள்ளது. இதற்கென இந்திய வீரர்கள் சிறப்பான வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
400 விக்கெட்டுகள் சாதனை
இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் ரவி அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இணைந்து 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ரவி அஸ்வின் மட்டுமே 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் அவர் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை பூர்த்தி செய்துள்ளார்.
லஷ்மன் பாராட்டு
இந்த சாதனையை அதிவேகமாக அதாவது 77 டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ள முதல் இந்திய வீரர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த சாதனை குறித்து அஸ்வினுக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறப்பான அணியுடன் விளையாட ஆர்வம்
ரவி அஸ்வின் சிறப்பாக விளையாடவும் சிறப்பான அணியுடன் விளையாடவும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். கடந்த போட்டிகளில் அவர் வீழ்த்தியுள்ள விக்கெட்டுகள், அதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல்பாட்டின்மூலம் அவர் தன்னையே மீண்டும் உருவாக்கியுள்ளதாவும் பாராட்டியுள்ளார்.
ஸ்மித்திற்கு நெருக்கடி
அவர் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பியிருக்காமல் சிறப்பான திட்டமிடலை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். பேட்ஸ்மேன்களின் குறைபாடுகளை கொண்டு அவர்களை வீழ்த்த தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பான பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்திற்கே அவர் நெருக்கடி கொடுத்ததையும் லஷ்மன் சுட்டிக் காட்டியுள்ளார்.