ஈடன் கார்டன் டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் மறக்க முடியாத போட்டி என்றால் அது 2001 கொல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி தான். இந்திய கிரிக்கெட்டை புத்துணர்ச்சியுடன் மீளச் செய்த போட்டி அது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 20 ஆண்டுகளுக்கு வீறு நடை போடப் போவதன் அடையாளமாக அமைந்தது அந்தப் போட்டி.
ஆஸ்திரேலியா உடன் மோதல்
அன்று கிரிக்கெட் உலகில் பெரிய அண்ணனாக மற்ற எந்த அணிகளையும் பெரிதாக எண்ணாமல் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்தது ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி நிலை
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கெத்தாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. ஏற்கனவே, 2000மாவது ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் புகார்களால் இந்திய கிரிக்கெட் நிலைகுலைந்து போய் இருந்தது. கங்குலி தலைமையில் இந்திய அணி ஒரு மாற்றத்திற்காக காத்திருந்தது.
ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
ஆனால், இந்திய அணியை சற்றும் பெரிதாக நினைக்காத ஆஸ்திரேலிய அணி ஈடன் கார்டன் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 445 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி திக்கித் திணறி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. விவிஎஸ் லக்ஷ்மன் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் 59 ரன்கள் குவித்து இருந்தார்.
தப்புக் கணக்கு
கங்குலி, டிராவிட், சச்சின் என அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலியா சற்றும் யோசிக்காமல் பாலோ ஆன் கொடுத்தது. 274 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணியை இரண்டாவது இன்னிங்க்ஸிலும் எளிதாக வீழ்த்தலாம் என தன் மமதையால் தப்புக் கணக்கு போட்டது.
விவிஎஸ் லக்ஷ்மன் ஆட்டம்
ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணியில் விவிஎஸ் லக்ஷ்மன் ஆட்டத்தை மாற்றினார். துவக்க வீரர்கள் சிவசங்கர் தாஸ், சடகோபன் ரமேஷ் 39, 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சச்சின் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். கங்குலி 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
லக்ஷ்மன் - டிராவிட் ஆட்டம்
அதன் பின், நங்கூரம் போட்டு ஆடி வந்த விவிஎஸ் லக்ஷ்மனுடன், ராகுல் டிராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபார ஆட்டம் ஆடினர். விவிஎஸ் லக்ஷ்மன் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 281 ரன்கள் குவித்தார். டிராவிட் 180 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலியா வீழ்ந்தது
இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸில் 657 ரன்கள் குவித்தது. ஐந்தாம் நாளில் கால்வாசி நாள் கழிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் என்ற கடின இலக்குடன் இரண்டாம் இன்னிங்க்சை ஆடியது. ஹர்பஜன் சிங் 6, சச்சின் 3 விக்கெட்களை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 68.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இந்தியா வரலாற்று வெற்றி
இந்தியா முதல் இன்னிங்க்ஸில் எடுத்த அதே 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றிக்கு பின் உடை மாற்றும் அறையில் இந்திய அணியினர் கூடினர். அவர்கள் முன் ஒரு சாம்பெயின் வையின் பாட்டில் இருந்தது.
|
டிராவிட் கொண்டாட்டம்
முதலில் சச்சின் அந்த பாட்டிலை எடுத்து குலுக்கி கொண்டாடினார். அடுத்து அந்த பாட்டிலை யார் எடுத்து கொண்டாடப் போகிறார் என பார்த்த போது, ராகுல் டிராவிட் குதூகலத்துடன் அந்த பாட்டிலை எடுத்து கொண்டாடினார். அவருக்கு பின் கங்குலி கொண்டாடினார். எப்போதும் அடக்கமாக இருக்கும் டிராவிட் அன்றைய வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தார். அந்த களிப்பை அவர் கொண்டாடிய காட்சி தான் இப்போது வைரல் ஆகி வருகிறது.